இன்றைய ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டிபஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இரண்டு அணிகளும் இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் சென்னைஅணி யிடமும், ஹைதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் மண்ணை கவ்வியுள்ளது. இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகின்றன. பஞ்சாப் மொகாலி ஆடுகளம் எப்போதும் கிங்ஸ் லெவனுக்கு ராசியானது. கடந்த சீசனையும் சேர்த்து கடைசியாக இந்த ஆடுகளத்தில் ஆடிய 6 ஆட்டங்களிளும் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரைத் தான் அந்த அணி உறுதியாக நம்பி இருக்கிறது. இவர்களை வீழ்த்தினால் மிடில் வரிசையில் இறங்கும் பேட்ஸ் மேன்கள் சொதப்பி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டமே இதற்க்கு ஆதாரம். அதனால் இன்றைய போட்டியில் மிகுந்த கவனமுடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவது சந்தேகம் தான்.
பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்த ஆடடத்தில் பஞ்சாப்பில் கிறிஸ் கெய்ல் ஆட்டத்தையும். ஹைதராபாத்தில் டேவிட் வார்னர் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி அணி 3 வெற்றியும், ஹைதராபாத் அணி 9 வெற்றியும் பெற்றுள்ளது.