Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 4,894 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த எண்ணிக்கை 1,26,670ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது.. அதில், இன்று தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 113 (58 அரசு + 55 தனியார்) உள்ளன.. இன்று மட்டும் 51,066 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,35,645 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 4,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ல் இருந்து  1,80,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 2,626 -ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இன்று 4,894 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776 ல் இருந்து 1,26,670 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 70.12 % பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது.. இருப்பினும் 4800க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது.. தற்போது தமிழகத்தில் 51,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |