புதுக்கோட்டை மாவட்டத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டு அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி என்ற கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரே பிரிவினரை சார்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்தில் திருநாவுக்கரசு மற்றும் சின்னையா நடராஜன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கே. புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விசாரணைக்கு சென்ற போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த இடத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.