கடன் தொல்லையால் பெண் உடலில் தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். தச்சு வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (35) என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு அபிநயா(12) மற்றும் மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டினர். இதற்காக தனியார் வங்கியிடமும், சிலரிடமும் இவர்கள் கடன் வாங்கியிருந்தனர்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஐயப்பன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. இதனால் தினசரி செலவுகளுக்கே திண்டாடி வந்த நிலையில், வாங்கிய கடனை மாதந்தோறும் சரியாக செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள் பணத்தை கொடுக்கும்படி நெருக்கடி கொடுக்க, இதனை சமாளிக்க முடியாத நிலையில் மன அழுத்தத்தில் இருந்த ஐயப்பனின் மனைவி தனலட்சுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் உடலின் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பேரளம் போலீசார் தனலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.. அதில் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடன் உள்ளிட்ட தனி நபரிடம் பெற்ற கடன் தொகையைக் கேட்டு, தொடர்ந்து நெருக்கடி செய்ததால், மனமுடைந்து தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அனைத்துத் தரப்பினரும் வேலையில்லாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இதனையறிந்த தமிழக அரசு 6 மாதத்திற்கு மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் வங்கிக் கடன் தவணை வசூலிக்க 6 மாதம் விலக்களித்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகமும் அரசின் உத்தரவை கடைப்பிடிக்கும் வகையில், 6 மாதத்துக்கு யாரிடமும் கடனை வசூலிக்கக் கூடாது என மகளிர் குழுக்களுக்கு கடனுதவி செய்திருக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால், இதனைக் கடன் கொடுத்த தனியார் நிறுவனங்களோ, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களோ துளியும் மதிப்பதில்லை. இந்த நிலையில்தான் தனலட்சுமி தீக்குளித்துள்ளார்.. இதுகுறித்து பேரளம் காவல் நிலையத்தில் ஐயப்பன் புகாரளித்துள்ளார். இதனை உணர்ந்து உத்தரவை மீறி கடன் தவணை வசூலிப்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.