வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்ற கணவரை விரட்டி சென்று மறித்து மனைவி நடு ரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையின் தென் பகுதியில் பெட்டர் என்ற ஒரு சாலை உள்ளது. இங்கு கோடீஸ்வரர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை மாலை பெட்டர்சாலையில் கருப்பு நிறத்தில் ரேஞ்ச்ரோவர் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதற்கு பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்துள்ளது. அந்த வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரை மறித்து சாலை நடுவில் நின்று கொண்டு போராடினார். காரின் ஓட்டுநரை வெளியே இழுக்க முயன்றுள்ளார். அதன் பின் காரின் பேனட் மீது ஏறி கூச்சலிட்டுள்ளார். அந்த பெண்ணின் திடீர் போராட்டத்தால் அங்கே போக்குவரத்து நின்று போனது. அங்கு சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த 3 காவலர்கள் வந்து ரேஞ்ச் ரோவர் காரையும், வெள்ளை நிற காரையும் காம்தேவி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரவீண் பட்வால் கூறுகையில், “ரேஞ்ச் ரோவர் காரில் 30 வயதான ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். வெள்ளை நிற காரில் வந்த பெண், ரேஞ்ச் ரோவர் காரில் வந்த ஆணின் மனைவி. சந்தேகத்தால் அந்த பெண், கணவரின் காரை மறித்து போராடியுள்ளார். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சாலையில் காரை நிறுத்திவிட்டு, மற்றொரு காரை வழிமறித்த குற்றத்திற்கு அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை” என்று அவர் கூறியுள்ளார். ரேஞ்ச் ரோவர் காரை வழிமறித்து மனைவி போராடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.