சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆவணங்களை சேகரிக்கவும் உத்தரவிட்டதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
தற்போது வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் காவல்நிலையம் இருந்து வரும் நிலையில் இன்று காலை நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் ஆஜராகி, சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவர்களை விசாரணையை முடித்து விட்டனர்.
தடவியல் அறிவியல் துறை யினரும் தடயங்களை சேகரித்தனர். ஆகவே சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை காவல்துறையினர் வசம் ஒப்படைத்து விட்டு வருவாய் துறை அதிகாரிகள் மீண்டும் அவர்களிடம் பணிகளுக்கு திரும்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.