தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு காதல் கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சமடைந்தார்.
கரூர் மாவட்டம் பரமத்திக்கு உட்பட்ட ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த 21 வயதுடைய பிரவினா என்பவர் தன்னுடைய காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை பழைய சோளகாளிபாளையம் பகுதியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்து, கல்லுரியில் பி.காம். வரை படித்துள்ளேன். இந்தநிலையில் நானும், ஆத்துமேட்டு தெருவைச் சேர்ந்த சஞ்சய் (வயது 21) என்பவரும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். காதல் விவகாரம் பற்றி என்னுடைய பெற்றோருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் என்னை வலுக்கட்டாயமாக வீட்டு காவலில் அடைத்து வைத்து, எனது விருப்பத்திற்கு மாறாக வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் கடந்த 11ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு தப்பி ஓடி வந்து, தாந்தோணிமலை காளியம்மன் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஆத்துமேட்டு தெருவிலுள்ள எனது கணவர் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம்.
இந்தநிலையில் கடந்த 13ஆம் தேதி தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் கணவரின் வீட்டிற்கு வந்து, அவரை கொல்ல முயன்று, என்னை விருப்பமின்றி அழைத்து செல்ல முயன்றனர். இதனால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்தோம்.. ஆனால் தனது கணவரின் உறவினர்களை மிரட்டியும், கணவரின் மொபைல்போனுக்கு தொடர்ந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர்.
எனவே எங்களது கலப்பு திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், எனது கணவரை ஆணவக்கொலை செய்ய முயற்சி செய்யும் எனது பெற்றோர் மற்றும் அவரை சேர்ந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.