செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடீரென மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தீ பற்றி எரிந்ததும் மாணவியின் அலறல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்..
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமியை மீட்டு உடனே அடுக்கம்பாறை யிலுள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், சிறுமியின் உடலில் 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார். அதில், ”நான் தச்சு வேலை செய்து வருகிறேன்.. என்னுடைய மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் வேலைபார்த்து வருகிறார்.. என்னுடைய மகள் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து விட்டு 11ஆம் வகுப்பு செல்கிறார்.. தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில், நாங்கள் இருக்கும் பகுதியைச் சேர்ந்த பெயிண்டராக வேலை பார்த்து வரும் 2 சிறுவர்கள், என்னுடைய மகள் குளிக்கும்போது மொபைல்போனில் படம்பிடித்துள்ளனர். அந்த படத்தை என் மகளிடம் காட்டி, தாங்கள் அழைக்கும்போது நீ வர வேண்டும் என்றும், இல்லை என்றால் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவு செய்து பரப்பி விடுவோம் எனவும், தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.. இதனால் மனமுடைந்து போன தனது மகள் நாங்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தபுகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இரு சிறுவர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.