நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த கங்கா குமார் என்பவரின் மனைவி சரோஜ்.. 21 வயதுடைய சரோஜ் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், தினக்கூலி வேலை செய்து வந்த கங்கா குமார் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்தார்.
இதனால் வீட்டில் பணமில்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக குமாருக்கும், மனைவி சரோஜ்ஜிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக நேற்று முன் தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் ஆத்திரத்தில் மனைவி சரோஜை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சரோஜ் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். அதேபோல அவர் கருவிலிருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்துவிட்டது, இதனிடையே சரோஜின் பிரேத பரிசோதனையில் அவரின் வயிறு மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக கத்திக்குத்து பட்டதும் அதனாலேயே அவர் இறந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் தான் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துள்ளது..
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய குமாரின் பைக் அங்குள்ள ஆற்றின் அருகே நின்று கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் குமார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .
ஆனால் அவரது சடலம் கிடைத்தால் தான் அது குமார் என உறுதிப்படுத்த முடியும் என போலீசார் கூறியுள்ளனர். கர்ப்பிணி பெண் கணவனால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.