பெரம்பூர் அருகே 5 மாத பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராகவன் சாலைப் பகுதியில் இருக்கும் குப்பைத்தொட்டி ஒன்றில் 5 மாத பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் தூக்கிவீசிச் சென்றுள்ளனர். அந்த குழந்தையை அப்பகுதியிலிருந்த நாய் ஒன்று குப்பை தொட்டியிலிருந்து சாலையில் இழுத்துப்போட்டு கடித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு, திரு.வி.க. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏற்கனவே இறந்த நிலையில் இருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது ஆண் குழந்தை எனவும், பிளாஸ்டிக் பையால் சுற்றி அதனைக் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.