சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், பொருளாதர வளர்ச்சி மேம்படவும் எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் தான், எனவே சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம். ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை வங்கிகள் வழங்க வேண்டும்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும் என்றும் விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.