புதுச்சேரியில் 64 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க நிபந்தனைகளும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் 64 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபானங்கள் விலை இரண்டு மடங்கு உயர்வால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.40க்கு விற்ற குவாட்டர் தற்போது ரூ.120க்கு விற்பனை, ரூ. 113க்கு விற்ற பீர் விலை ரூ.240க்கு விற்பனை, ரூ. 145க்கு விற்ற வெளிநாட்டு பீர் தற்போது ரூ.508க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு 3 மாதங்கள் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது