Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு மார்ச்- க்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்: நிதியமைச்சர்!!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.

அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல சாலையோர வியாபாரிகள், சிறிய வியாபாரிகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார். சுயதொழில் செய்து வருபவர்களுக்கும் இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பிரதமரின் தன்னிறைவு இந்தியா என்கிற திட்டத்தின் அடிப்படையில் இன்றைய அறிவிப்புகள் இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ” புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த விலை குடியிருப்பு வசதி செய்து தரப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும். பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.

வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க அனுமதி வழங்கப்படும். அதில், 23 மாநிலங்களில் உள்ள 67 கோடி குடும்பங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வகை செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தை மார்ச் 2021 உள்ளாக இவற்றை நடைமுறைப்படுத்தி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |