கொரோனா தொற்றால் பாதிப்படைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 2 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 114 பேரும் குணமடைந்ததால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,204ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 27.19% பேர் குணடமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.