தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.