முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோன்ற நேரத்தில் மன்மோகன் சிங்கின் சேவை நம் நாட்டுக்கு தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
காய்ச்சல் ஏற்பட்டதற்கான வேறு காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் கார்டியோடோராசிக் மையத்தின் மருத்துவர்கள் குழுவின் பராமரிப்பில், அவர் தற்போது நிலையான உடல்நிலையில் உள்ளார்” என்ற தகவலை கூறியுள்ளது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேட்டு, அவர் விரைவில் குணமடைய வேண்டி திமுக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.