விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளால் ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதை சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி தேசிய மேலாண்மை குழுவுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.