குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக கூறி வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமிகள் எலி மருந்தை பல் துலக்குவதற்கு தவறாக பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக இரண்டு சிறுமிகளும் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து சாந்தமீனா மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த மீனா போலீசாரிடம் கூறியதாவது திருச்சிக்கும் மனப்பாறைக்கும் நடுவே இருக்கும் சமுத்திரம் என்கிற கிராமத்தில் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். சமீபத்தில் தனது கணவன் கொடூர நோயினால் மரணமடைந்து விட கணவரின் சகோதரர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து வீடுகளில் வசித்து வந்தனர்.
கணவரின் சகோதரர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் வைத்திருக்கும் பணம் அடிக்கடி காணாமல் போனது. எனது மகள்கள் தான் பணத்தை எடுத்தார்கள் என்பதை கண்டுபிடித்த நான் அதிர்ச்சியடைந்து அதனால் குடும்பத்துக்கு அவப்பெயர் வந்துவிடும் என்ற அச்சத்தினால் 6 வது மற்றும் 8 வது படிக்கும் மகள்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அளித்த புகாரின் அடிப்படையில் சாந்தமீனாவை கைது செய்து இந்த கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் இருக்கின்றதா என விசாரித்து வருகின்றனர்.