ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார்.
கொரோனா பாதிப்பு நாட்டில் குறையாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு 29வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி ஆலோசனை நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி இதுவரை 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் 3வது முறையாக ஆலோசனை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.