100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மால் போன்றவை மூடப்பட்டன.
இதன் காரணமாக தினசரி கூலித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், சில ஊரடங்கு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், கட்டுமான பணிகள், 100 நாள் வேலை திட்ட பணிகள், விவசாய பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், வரும் 20ம் தேதியில் இருந்து தளர்வு விதிகளின் படி, மக்கள் வேலை பார்க்க உள்ளனர். இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் படி,தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.