கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் நபர்களில் ஒருவர் பெண் போலீஸ். கடந்த சில தினங்களாக சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை எடுக்க சென்றபொழுது ரோந்து பணியில் ஈடுபட்டதால் கொரோனா தொற்று இருக்குமோ என சந்தேகித்த சுகாதாரத்துறையினர் அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அந்தப் பெண் போலீஸை ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.