கொரோனா பரிசோதனைக்காக நேற்றிரவு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை வரவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய முடிகிறது. மேலும் நேர விரயம் ஆகிறது. இதனால் சீனாவில் பின்பற்றிய முறையை பயன்படுத்தி கொரோனா பரிசோதை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கருவிகள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது.
இன்று முதல் அந்த கருவிகள் மூலம் பரிசோதனை தொடங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் நேற்று பேட்டியளித்த முதல்வர் பழனிசாமியும் இதனை உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக நேற்றிரவு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை வரவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 50,000 கருவிகள் இதுவரை வராததால் இன்று பரிசோதனை தொடக்கப்படாது.
இன்று இரவு அல்லது நாளை கருவிகள் வரும் பட்சத்தில் ஏப்., 12ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் தொடங்கும் என அறிவித்துள்ளனர். ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்து விடும், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு சோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் மார்க்கமாக வந்து கொண்டிருப்பதால் எப்போது வரும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.