Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊதியத்தில் பிடித்தம் – கொரோனா நிவாரணத்திற்கு ரூ.15.36 கோடி!

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ள நிலையில் 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யபட்டுள்ளது. மொத்தம் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் சுமார் 15.36 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. இதன் மூலம் எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |