தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் விவசாயிகளிடம் காய்கறி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்கப்படுவதாக கூறிய அவர், விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்கள் அறிவித்துள்ளார். வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு உதவிகளை இதன் மூலம்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதில் உதவிட அவசரகால தொலைபேசி எண்கள் – 044-22253884, 22253883, 22253496, 95000 91904. இந்த எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வாழ்வாராதம் பாதிக்கப்பட்டு உற்பத்தி செய்த விளை பொருட்களை தேக்கி வைத்திருந்த விவசாயிகளுக்கு முதல்வர் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.