கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு காய்ச்சல் போகவில்லை என்றும், அதனால் தான் இன்னும் பல நாட்கள் தனிமை வாசத்தைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி, பிரதமர் போரிஸ் நேற்று மாலை ஜான்சன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பிரதமருக்கு அவசர நிலை ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு வீட்டுவசதி துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக், தேவைப்படும் வரை பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருப்பார் என்றும், அதே சமயம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார். மேலும் கூடிய விரைவிலேயே அவர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்புவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.