கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால், வேறு வழியில்லாமல் அதே மாவட்டத்தில் இருக்கும் தோபாரா என்னும் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரரின் வீட்டிற்கு சென்றார் நிரஞ்சன். ஆனால் அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி ஓன்று காத்திருந்தது. அதாவது, கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த அந்தக் கிராம மக்கள் வெளியூரில் இருந்து வந்திருந்த நிரஞ்சனை கிரமத்திற்குள்ளே வர அனுமதிக்க மறுத்தனர்.
இதனால் அவர் தனக்கு எந்தவொரு நோய் தொற்றும் இல்லை என்று நிரூபிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்ததில் எவ்வித நோய்த் தொற்றும் இல்லை என்று கூறிய மருத்துவர், வெளியூரில் இருந்து வந்துள்ளதால் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் நிரஞ்சனின் சகோதரர் வீட்டில் ஏற்கனவே 5 நபர்கள் இருப்பதால், அவரை தனிமைப்படுத்துவதற்காக போதிய இடவசதியில்லை. இதையடுத்து. நிரஞ்சனின் சகோதரர் ஊர்மக்களிடம் கலந்து ஆலோசித்து, விநோதமான ஒரு முடிவிற்கு வந்தார். அது என்னவென்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஆற்றின் அருகே படகில் அவரை தனிமைப்படுத்துவது தான். தற்போது நிரஞ்சன் படகில் தனிமையில் இருந்து வருகிறார்.
இதுகுறித்து கூறிய நிரஞ்சன், மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவு குறித்து தெரியாமல், சகோதரரின் வீட்டிற்கு வந்து விட்டேன். இதனால் தன்னை கிராம மக்களின் ஆலோசனைப்படி, தனது சகோதரர் படகில் தனிமைப்படுத்தியுள்ளார்.
மேலும், தனக்கு தேவையான உணவு பொருள்களை தினமும் வழங்கி சென்றாலும் தனிமையில் இருக்கும் தனக்கு நீரின் அலைகளே துணையாக இருக்கின்றன என தனிமையின் விரக்தியிலும், அச்சத்தில் உள்ள அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.