நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் அருகே இருக்கும் பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் இருக்கும் தாழ்வான தரைப்ப்பாலத்தை கடந்து நொய்யல் ஆறு செல்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சென்ற சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற 2 நாட்களாக நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ளது.
புது வெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் நொய்யல் ஆற்றில் மழை நீர் வெள்ளப்பெருக்கு திடீரென அதிக அளவில் வந்து ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி சீறிப்பாய்ந்து ஓடியது. இதன் காரணமாக புது வெங்கரையாம்பாளையம் கிராமம் அருகே இருக்கும் நொய்யல் ஆற்றில் தாழ்வான தரைப்பாலம் மூழ்கியதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும் அக்கரையோர பகுதிகளில் இருபுறமும் வசித்து வரும் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது.