கோவையில் உள்ள முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டதாக புகார் அளிக்கப்பட்டு போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ,நேற்று மாலை திவ்யா, ரேணுகா என்ற இரு ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தில் பணியில் இருந்ததாகவும், காவலாளி இல்லை எனவும் கூறப்படுகிறது. அப்போது முகமூடி அணிந்து வந்த மர்மநபர் 812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அந்த இரு ஊழியர்களும் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மேலதிகாரிகள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கொள்ளை குறித்து புகார் அளித்துள்ளனர். புகார் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் அந்த இரு பெண் ஊழியர்களும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.மேலும், முகமூடி அணிந்து கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சியும் கிடைத்துள்ளது .