டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பஜன் பகுதியில் நேற்று ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஷம்பு (43) என்பவரின் குடும்பம் என தெரியவந்துள்ளது.
மேலும் அவரது மனைவி சுனிதா(37), மகன்கள் சிவம் (17), சச்சின் (14) மற்றும் மகள் கோமல் (12) என்பவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஷம்பு எந்த ஒரு வம்புக்கும் செல்பவர் அல்ல எனவும் இவர்களது குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் எனவும் ஆனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு எந்த ஒரு குடும்பப் பிரச்சினையும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
அதனால் இந்த தற்கொலை ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி சம்புவின் மகள் கோமல் கடைசியாக கடந்த 3ஆம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலங்களை பரிசோதித்த மருத்துவர்கள் சுமார் நான்கு நாட்களுக்கு முன்னரே இறந்து உள்ளனர் என தெரிவித்தனர். தற்போது போலீசார் ஷம்பு பயன்படுத்திவந்த மொபைல் போனை தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் கொலை வழக்காக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.