தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!
தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்துள்ளனர். கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர், தூத்துக்குடி 5 பேர், திருவண்ணாமலை 4 பேர், சேலம், வேலூர், மதுரையில் தலா 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தஞ்சையில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகையில் புதிதாக 3 பேருக்கும், விழுப்புரத்தில் 7 பேருக்கும், கடலூரில் 6 பெருக்கும், தென்காசியில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழத்தில் 23 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.