மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மகாராஷ்டிராவின் ஒரு பகுதியில் மட்டும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில், இன்று நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து மகாராஷ்டிரா சென்றவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஊர் திரும்ப முயல்கையில், தமிழகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அனைவரும் தலா 3,500 ரூபாய் செலுத்த வேண்டுமென மஹாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அங்கிருப்பவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில் ஏழை தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் ” குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.