சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி நாடாக உருவான உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால் தனது அண்டை நாடான உக்ரைன் நோட்டாவில் இணைவது தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி ரஷ்யா இதனை கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில் ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் போராக வெடித்தது. அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்கின்றது. இந்த ஆறு மாத காலப் போரில் உக்ரைன் எண்ணற்ற நகரங்களை ரஷ்யப்படைகள் சின்னா பின்னம் ஆக்கியுள்ளது. போரின் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தாலும் தாய் நாட்டை விட்டு வெளியேற விரும்பாத பல லட்சம் மக்கள் போருக்கு நடுவே வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
போரின் ஆறாவது மாதத்தை நிறைவு செய்யும் இன்று உக்ரைன் தனது 33வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் எனவும் அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலனஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சிவில் உள் கட்டமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள அமெரிக்க தூதகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
அதனால் இன்னும் உக்ரைனில் தங்கி இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது பற்றி அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் முழுவதும் பாதுகாப்பு நிலைமை மிகவும் நிலையற்றது நிலைமை இன்னும் மோசமடைய கூடும் என்ற காரணத்தினால் உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் தரைவழிப் போக்குவரத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற தூதரகம் கேட்டுக்கொள்கின்றது என அதில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே ரஷ்ய தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதினால் தலைநகர் கிவ் உட்பட முக்கிய நகரங்களில் சுதந்திர தின பேரணிகள் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை நடத்த உக்ரைன் அரசு தடை விதித்து இருக்கிறது.