லிபியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நிலையில் கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள்.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அரச படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையில் இயங்கும் கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
எனவே, அந்நாட்டு மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்பி, இத்தாலி ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் முயற்சியாக ரப்பர் படகுகளின் வழியே உயிரை பணயம் வைத்து கடலில் பயணிக்கிறார்கள். மேலும், உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் அகதிகளும், வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகளின் அகதிகளும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள்.
அப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், லிபியாவின் திரிபோலி கடலின் எல்லைபகுதி வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சித்து 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்டார்கள். அவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அதன்பின்பு, அவர்களை லிபியாவில் இருக்கும் அகதிகள் முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.