கடலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை தயார் செய்து கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூரில் வரக்கால்பட்டை பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரின் மகன் பிரபு (40) கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர். நாச்சியார் பேட்டை சேர்ந்த மணி என்பவரின் மனைவி லட்சுமி(46) கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வருபவர்.
இந்த நிலையில் லட்சுமி மற்றும் பிரபுவிற்கு பண்ருட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் மகன் மாயமணியிடம்(34) பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. பிரபுவும், லட்சுமியும் தாங்கள் பலருக்கும் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக மாயமணியிடம் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் உங்களுக்கும் அரசு வேலை வேண்டுமா ? என கேட்டுள்ளனர். இதை நம்பி மாயமணி தனக்கும் ஏதாவது ஒரு அரசு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலை வேண்டுமானால் ரூ .3 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். மாய மணியிடம் பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து அதனை மூன்று லட்சத்திற்கு அடகு வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
இந்நிலையில் லட்சுமியும் பிரபுவும் சில நாட்களுக்கு முன் மாயமணியிடம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் வேலை கிடைத்துள்ளது என கூறி அதற்கான ஆணையை கொடுத்துள்ளனர். ஆணையைப் பெற்றுக்கொண்ட மாயமணி கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆணையை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த ஆணை போலியானது என அறிந்த அதிகாரி உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் மாயமணியிடம் விசாரணை நடத்தினர். இதில் லட்சுமியும் பிரபுவும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி வேலைக்கான ஆணை தயார் செய்து கொடுத்துள்ளது தெரிய வந்தது. அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி மற்றும் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1¼ லட்சம், நகை மற்றும் போலி முத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.