ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு காவலர்கள் நகை வியாபாரியிடம் இருந்து 300 சவரன் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளுவரை சேர்ந்தவர் மகேந்திரன். திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநகை கடைகளில் நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் மகேந்திரனின் மகன் 300சவரன் நகையுடன் ஆட்டோவில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த 300சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்பத்தூர் காவல்துறையினர், இந்த வழக்கில் திருக்கழுக்குன்றம் மானாபதி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் தமிழ், கதிரவன் ஆகிய இரண்டு காவலர்கள் உள்பட ஏழு பேரை கைது செய்து , அவர்களிடம் இருந்து 50 கிராம் தங்க நகை, ஒன்பது லட்சம் ரொக்கப் பணம் மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், வியாசர்பாடியில் கலைச் செல்வம், திவாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 35 சவரன் தங்க நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.