பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2020 – 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 3 முதல் 6ம் வகுப்பு வரை பயின்று மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதற்காக சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் 16 கோடியே 75 லட்ச ரூபாய் போடப்பட்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று இந்த கல்வி ஆண்டில் அரசு நிதியுதவி பெறும் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 898 கிராமப்புற மாணவிகளுக்கு பட்ஜெட் மதிப்பீட்டின் படி 16 கோடியே 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாயாக இருக்க வேண்டும்.இந்த நிதியை வழங்க ஏதுவாக ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகளிலும் (SCB) கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத் துறை அதிகாரிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ள கல்வி உதவி தொகை குறித்து பட்டியலும் இணைக்கப்பட்டது. விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிதி சென்றடைந்து அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.