மோட்டார் சைக்கிளில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இழுப்பந்தாங்கல் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சந்தோஷ் போதை பொருள் ஒழிப்பு மற்றும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடும் வகையில் தனது உடல் முழுவதும் தேசிய கொடியை கட்டிக்கொண்டு சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் ஓடும் மோட்டார் சைக்கிள் மீது நின்று சாகசம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனை காணும் பொதுமக்கள் சந்தோஷை பாராட்டி வருகின்றனர்.