வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு தலைமை வன உயிரின பாதுகாவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி மற்றும் கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு புலி ஒன்று 4 பேரை கடித்து கொன்றது. கடந்த அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அட்டகாசம் செய்த புலியை பிடித்து விட்டனர். இதனையடுத்து காயங்களுடன் இருந்த அந்த புலியை கூண்டுக்குள் அடைத்து மைசூரு வன விலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சைக்குப் பிறகு புலியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அந்த புலியை கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் நீரஜ்குமார் மைசூர் வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு சென்று அந்த புலியின் உடல் நிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து நீரஜ் குமார் கூறும்போது, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால் புலியின் உடல் எடை 200 கிலோவாக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவக் குழுவினரின் உத்தரவிற்கு அந்த புலி கட்டுபட்ட போதிலும், அதன் கோபம் இன்னும் மாறவில்லை. எனவே தொடர்ந்து அந்த புலி இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. அதன் உடலில் உள்ள 2 பெரிய காயங்கள் குணமடைந்து விட்டது. எனவே புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.