சட்ட விரோதமாக கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டவிரோதமான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் ஷாமினி, மரியதாஸ் ஆகியோர் புலியூர்குறிச்சியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் சென்றதால் வட்ட வழங்கல் அதிகாரி சுனில் ஜீப்பில் அந்த காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். இதனை பார்த்ததும் கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 2 டன் அரிசியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் 30 சாக்கு மூட்டைகளில் இருந்த அரிசி மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.