கரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இ-சேவைகள் மையங்கள் மூலமாக அரசின் சேவைகள் 200 லிருந்து 300-க உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களையும் ஆன்லைனில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஆன்லைன் சேவைகளில் உள்ள குறைகளை கலைவதற்கு 2.0 திட்டம் நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது. அரசின் திட்டங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு இ- சேவை மையங்கள் உதவும். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பைபர் சேவை நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் நடைமுறைக்கு வரும். அதன்பிறகு இ-சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணங்கள் வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆன்லைன் சேவைகள் மூலமாக 38 டன் அளவிற்கு காகித பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது என்றார்.