சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தீவிரமாக கண்காணிக்க புதிதாக 177 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது, மக்கள் நடமாட்டத்தால் தான் தொற்று வேகமாக பரவுகிறது. இதனால் ஊரடங்கை தீவிரப்படுத்த 177 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த குழுவில் உள்ளாட்சி, மருத்துவம், வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 354 மண்டல அதிகாரிகள் தலைமையில் இந்த குழுக்கள் செயல்படும். மேலும் இவர்களுக்கென்று தனியாக 177 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.