170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது.
கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை இல்லா விட்டாலும் அங்கேயே தங்கியிருந்தனர்.
கையிருப்பு கரைந்த நிலையில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டதால், சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தவர்கள் கையில் பணமின்றி, உண்ண உணவின்றி கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்தே சென்று கொண்டிருந்தனர். பள்ளி விடுமுறையால் கோவையில் பெற்றோருடன் தங்கி இருந்த 7 வயது சிறுவன் சபரி நாதனும் இவர்களுடன் நடந்தே ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். சேலம் கொண்டலாம்பட்டி அருகே,
இவர்களை கண்ட காவலர்கள் உணவு உண்ணாமல் இரண்டு நாட்களாக நடந்து வந்தது அறிந்து, உடனடியாக உணவு அளித்தனர். பசியோடும் , கொளுத்தும் வெயிலில் வெறும் காலோடு சிறுவனும் நடந்துவந்தது அங்கிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அனைவருக்கும் உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கிய காவலர்கள் அவ்வழியாக வந்த கனரக வாகனங்களை நிறுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.