கடலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையிலும், உழவர் சந்தை அருகிலும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் பெண் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனை அறிந்த பெண் ஊழியர்கள் நேற்று இரவு கடலூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெண் ஊழியர்கள் கூறியதாவது, கடந்த 7 ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகிறோம். கொரோனா காலகட்டத்திலும் உயிரை துச்சம் என நினைத்து வேலை பார்த்தோம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எங்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு புதிய ஊழியர்களை நியமித்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்து பணி செய்ய மாவட்ட நிர்வாகத்தினரும், மாவட்ட ஆட்சியரும் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என பெண் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.