தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக ரேஷன் பொருட் கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு போன் செய்து என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர். இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எதற்காக பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த கார்டு போலி ரேஷன் கார்டா? என்பதை கண்டறிவதற்குதான் என்று தெரியவந்துள்ளது.
ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம். இதில் ஓரளவு போலி ரேஷன் கார்டடை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.