சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவி எழுதிய மூன்று கடிதங்கள் கைப்பற்றப்பட்டது. அதில் ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை என்று எழுதி இருந்தார்.
இதில் ஒரு கடிதத்தை எழுதி விட்டு பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில் முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்தால் தான் தான் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் என்றும் பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்தார். மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.