சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை இலஞ்ச ஊழல் தடுப்புத் துறை தாமாக முன் வந்து விசாரித்து உள்ளதா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சி துறையில் நடைபெற்ற ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமின்றி அத்துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும்,சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஆகவே,எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தி 1000 கோடி ரூபாய் ஊழல் செய்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விரைவில் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.