இந்தியாவிலுள்ள 100 வழித்தடங்களில் ஓடும் 150 ரயில்களை தனியாருக்கு அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு விற்கவுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு அனைத்துச் சங்கங்களும் இன்று போராட்டம் நடத்திவரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை ஈவு இரக்கமின்றி மத்தியில் ஆளும் பாஜக அரசு விற்க முயன்றுகொண்டிருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் உயிரற்ற நிலையிலுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய ரயில்வேயின் 100 வழித்தடங்களிலுள்ள 150 ரயில்கள் தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரயில்வேயின் உயிரைப் பறிக்கின்ற வேலையாகும். தற்போது இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு பொருளாதார சுழலில் சிக்கி உலகம் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், இந்தியப் பொருளாதாரம் கம்பீரமாக நின்றது.
இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றலாகத் திகழ்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றையெல்லாம் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது” என்றார்