100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், நிதியுதவிகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
3 மாத காலத்திற்கு இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் கூலியை வங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்கிறார்கள். இதுவரை வங்கிகளுக்கு சென்று பெற்று வந்த நிலையில் தற்போது புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி வங்கி அதிகாரிகள் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். கொரோனா நோய் குறையும் வரை அடுத்த 3 மாதத்திற்கு இதே நடைமுறை தொடரும் என அவர் தெரிவித்தார்.