இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த தமிழிசை சவுந்தரராஜன், ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை குறிப்பிட்டார். இதே நிலை நீடித்தால் 100 சதவீதம் பேருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.