இங்கிலாந்து அரசு ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கள் முதல் புதன் வரை ஹோட்டல் சென்று சாப்பிடும் அனைவருக்கும் 50 சதவிகித கட்டணத்தை அரசே அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சலுகையில் சிறுவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி பெரும் வகையில் இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்று 80 பவுண்டுக்கு சாப்பிட்டால், 40 பவுண்டுகள் மட்டுமே கொடுத்தால் போதுமானது . இந்த திட்டம் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த திட்டம் என்று சேன்ஸலர் ரிஷி சுனாக் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் உணவகங்கள் மூலம் இதனை நடைமுறைபடுத்த இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. தள்ளுபடியாக வழங்கும் தொகையானது, ஒவ்வொரு உணவகங்களின் வங்கிக் கணக்கில் 5 நாட்களுக்குள் அரசு செலுத்தும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த தள்ளுபடி அறிவிப்பு பெரும்பாலும் உணவகங்கள், மதுபான விடுதிகளில் பணிபுரியும் 18 லட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. மேலும், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் 5 லட்சம் பவுண்டு வரையான சொத்துக்களுக்குரிய முத்திரை வரியை அடுத்த வருடம் மார்ச் 31 வரை ரத்து செய்துள்ளது. மேலும் விருந்தோம்பல் மற்றும் தங்குமிடங்களுக்கான மதிப்பு கூட்டு வரிகளை 20ல் இருந்து மிகக் குறைவாக 5 சதவீதமாக மாற்றியுள்ளது. இனி வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை இந்த திட்டம் அமுலில் இருக்கும். இதனால் உணவகங்கள், மதுபான விடுதிகள், கபே போன்றைவை சரிவில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளது.
மேலும் 18 முதல் 24 வயதுடன் பயிற்சி பெறுபவரை பணியில் அமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 1,000 பவுண்டுகள் ரொக்கமாக வழங்கப்படும் என்பதை சேன்ஸலர் ரிஷி உறுதியளித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை சுற்றுச்சூழலுடன் மாற்ற 5,000 பவுண்டுகள் வரை மானியம் பெறும் திட்டமும் அமுலுக்கு வர உள்ளது. இதில் மிக எளிய குடும்பங்களுக்கு 10,000 பவுண்டுகள் வரை மதிப்புள்ள காசோலை பெற்றுக்கொள்ளும் திட்டமும் அறிவிதுள்ளனர்.